சுற்றிவளைத்த ரஷிய ராணுவம்; சரணடைய மறுத்து உயிர் நீத்த 13 உக்ரைன் வீரர்கள்
ரஷியாவிடம் சரண்டைய மறுத்து 13 உக்ரைன் வீரர்கள் தங்கள் நாட்டிற்காக இன்னுயிரை நீத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், கிவ் நகரின் மையப்பகுதியில் இருந்து 10 கி.மீ வரை முழுவதுமாக ரஷிய ராணுவம் சுற்றி வளைத்தது.
உக்ரைனில் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது நகரமான கார்கிவ் மீது பீரங்கிகள் மூலம் ரஷிய ராணுவப்படை கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது. அதேசமயம் ரஷியப் படைகள் உக்ரைன் தலைநகருக்குள் முன்னேறிவரும் நிலையில் கிவ்-ல் மீண்டும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது.
உக்ரைன் தலைநகர் கிவ்-ல் உள்ள அரசு அலுவலகங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஸ்னேக் தீவு அருகே போர்க்கப்பலில் இருந்த ரஷிய வீரர்கள் உக்ரைன் வீரர்களை சரணடையும் படி வற்புறுத்தினர். எனினும் முடியாது என மறுத்த உக்ரைன் இராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தாக்குதலை தொடங்கும் முன், அந்த ஆடியோ குரலில் பேசிய ரஷிய ராணுவ அதிகாரி ஒருவர், "இது ஒரு ரஷிய இராணுவ போர்க்கப்பல்" என்று ரஷிய தகவல்தொடர்பு பதிவில் கூறியுள்ளனர்.
"இரத்தம் சிந்துவதையும் தேவையற்ற உயிரிழப்புகளையும் தவிர்க்க உங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு எங்களிடம் சரணடையுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
இல்லையெனில், உங்கள் மீது குண்டு வீசப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அதற்கு பதிலடி கொடுத்த உக்ரைன் ராணுவ வீரர், "ரஷிய போர்க்கப்பல், வந்த வழியே நீங்களே திரும்பி சென்று விடுங்கள் என கூறியுள்ளார்.
இதனையடுத்து உக்ரைன் கப்பல் மீது ரஷிய ராணுவ கப்பல் குண்டு வீசி தகர்த்ததாக அந்த தகவல்கள் கூறுகின்றன.