ஒரே நாளில் கடலில் கலந்த 150 கோடி தொன் நீர்! கடலில் நடந்த அதிசயம்
A68 என்கிற மிகப்பெரிய பனிப்பாறை உருகுவதால் ஒரே நாளில் 150 கோடி தொன் தண்ணீர் அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் உள்ள மொத்த மக்கள் தொகையும் ஒரு நாளில் பயன்படுத்தும் நீரைப் போல 150 மடங்கு அதிக தண்ணீர் இதன்மூலம் ஒரே நாளில் கடலில் கலந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
A68 உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக குறைந்த காலத்துக்கு இருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த போது கிட்டத்தட்ட 6,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இருந்தது. ஆனால் 2021ஆம் ஆண்டில் அத்தனை பெரிய பனிப்பாறை காணாமல் போய்விட்டது.
ஒரு டிரில்லியன் தொன் அளவிலான பனிப்பாறையை கரைந்துவிட்டது. தற்போது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் A 68 பனிப்பாறை சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்து ஆராய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
A 68 பனிப்பாறை அண்டார்டிகாவிலிருந்து பிரிந்து, தெற்கு பெருங்கடல் வழியாக வடக்கு நோக்கி பயணித்து, தெற்கு அட்லாண்டிக் கடலை வந்தடைந்தது. லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று, செயற்கைக் கோளின் தரவுகளைக் கொண்டு அப்பனிப்பாறை பயணித்த வழித்தடம் முழுக்க அதன் உருவம் எப்படியெல்லாம் மாறியது என்பதைக் கணக்கிட தேவையான தரவுகளை சேகரித்து வருகிறது. எனவே, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அப்பனிப்பாறையின் பயணத்தில், அது உருகும் விகிதம் எப்படி மாறுபட்டது என்பதை மதிப்பிட முடிந்தது.
A68 பனிப்பாறை அதன் கடைசி காலத்தில், பிரிட்டிஷ் - சவுத் ஜோர்ஜியா என்கிற வெப்பமான பகுதிக்கு வந்தடைந்தது. இந்த இராட்சத பனிப்பாறை ஆழம் குறைவான, இலட்சக் கணக்கான பென்குயின்கள், கடல் சிங்கங்கள், திமிங்கலங்கள் வேட்டையாடும் பாதையில் சிக்கிக் கொள்ளுமோ என்றும் கொஞ்ச காலத்துக்கு ஓர் அச்சம் நிலவியது.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, காரணம் A 68 பனிப்பாறை மிதப்பதற்குத் தேவையான ஆழத்தை இழந்தது. A 68 பனிப்பாறை கண்டத்தின் நிலபரப்பின் மீது மோதியது போலத் தான் தெரிகிறது. அப்போது தான் பனிப்பாறை திரும்பி, சிறு துண்டு உடைவதைக் கண்டோம்.
அது மட்டுமே A 68 பனிப்பாறையை நிறுத்த போதுமானதாக இல்லை என அந்த ஆய்வறிக்கையின் ஆசிரியரும் லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளருமான அனே ப்ராக்மான் - ஃபோல்கன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2021 காலத்தில், A68 பனிப்பாறை, கண்காணிக்க முடியாத அளவுக்கு எண்ணற்ற சிறிய துண்டுகளாக உடைந்தது.
ஆனால் அது சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் மிக நீண்ட காலத்துக்கு இருக்கும்.
அப்பனிப்பாறைகள் வெளியிடும் நன்னீர், கடலின் நீரோட்டத்தை மாற்றும். மேலும் இரும்பு போன்ற தாதுப் பொருட்கள், நுண்ணுயிரிகள் கடலில் கலந்து உயிரி உருவாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவா் தெரிவித்தார்.