ஜப்பானில் 150 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்; தவிக்கும் மக்கள்!
ஜப்பானில் கடந்த 150 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்ப அலையின் தாக்கம் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்ப அலைகளின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவு பதிவாகி வருகிறது.
அதன் ஒருபகுதியாக ஜப்பானில் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று புதன்கிழமை 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இது கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.
தொடர்ந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை முறையே 36 டிகிரி செல்சியஸ் மற்றும் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு வெப்பநிலை பதிவாகிவருவது நகரின் மின் தேவையை அதிகரித்துள்ளதாகவும், இதனால் மக்கள் தங்களது மின் பயன்பாட்டை சிக்கனமாக கையாளவும் அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மாலை 3 மணி முதல் தேவையற்ற விளக்குகளை அணைக்குமாறு அறிவுறுத்தியுள்ள ஜப்பான் அரசாங்கம் அந்நேரங்களில் குளிர்சாதனக் கருவிகளை மட்டும் பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது.