யேர்மனியில் கொலோனில் இருந்து வெளியேற்றப்பட்ட 20,000 பேர்
யேர்மனியில் இரண்டாம் உலகப் போரின் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட உள்ளதால் கொலோனில் (கேளின்) 20,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின் மூன்று குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நோட்ரைன் வெஸ்பாலியாவின் மேற்கு நகரமான கோலோனின் மையத்தில் உள்ள கட்டிடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நடவடிக்கை நகரத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய நகர்த்தலாகும். 80 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த இரண்டாம் உலகப் போரில் எஞ்சியிருந்த மூன்று குண்டுகளை செயலிழக்கச் செய்ய நிபுணர்கள் தயாராகி வருகின்றனர்.
இதன் காரணாமாக , கொலோன் நகர மையத்தின் பெரிய பகுதிகள் இன்று புதன்கிழமை மூடப்பட்டன. சுமார் 20,000 பேர் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டனர்.
நகரின் முழு பழைய பகுதி, 58 ஹோட்டல்கள், மூன்று ரைன் பாலங்கள், டவுன் ஹால், நகர மையத்திலிருந்து ரைனின் குறுக்கே அமைந்துள்ள டியூட்ஸ் மாவட்டத்தில் உள்ள தொருந்து நிலையம், அருங்காட்சியகங்கள், ஒரு மருத்துவமனை மற்றும் இரண்டு பராமரிப்பு இல்லங்கள் ஆகியவை அடங்கும். யேர்மனியின் தேசிய தொடருந்து நிறுவனமான டாய்ச் பான், பல தொடருந்துகள் திருப்பி விடப்படும் அல்லது இரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரண்டு 200 பவுண்டு (90 கிலோகிராம்) குண்டுகள் மற்றும் ஒரு 100 பவுண்டு குண்டு ஆகியன திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கை இதுவாகும். இன்று புதன்கிழமைக்குள் மீட்புப் பணிகள் நிறைவடையும் என்று சம்பந்தப்பட்ட அனைவரும் நம்புகிறார்கள் என கொலோன் நகரம் தனது வலைத்தளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது நேச நாட்டுப் படைகளின் முக்கிய குண்டுவீச்சு இலக்குகளில் ஒன்றாக கொலோன் இருந்ததால், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது ஒன்றும் புதிதல்ல.
மற்ற தாக்குதல்களில், பிரிட்டிஷ் ராயல் விமானப்படை, மே 31, 1942 அன்று இரவு ஒரு யேர்மன் நகரத்தின் மீது தனது முதல் ஆயிரம் குண்டுவீச்சுத் தாக்குதலுடன் கொலோனை குறிவைத்தது. 1,455 டன் குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான கட்டிடங்களை அழித்தது அல்லது சேதப்படுத்தியது என்பது வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.