கனடாவில் பாரிய போதைப் பொருள், ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது
கனடாவின் ரிச்ச்மண்ட் ஹில் பகுதியில் பென்டனில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி வியாபாரத்தில் ஈடுபட்ட ஒரு முக்கிய குற்றவாளி குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
“ப்ராஜெக்ட் சாட்டர்” என்ற பெயரிலான ஏழு மாத விசாரணையின் முடிவாக, 23 பேர் மீது 330 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணை கடந்த 2024 ஒக்டோபரில் தொடங்கப்பட்டது. இவ்விசாரணையின் போது டொரண்டோ பெரும்பாகம் முழுவதும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட கும்பலைத் தேடி விசாரணை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"இது ஒரு நுணுக்கமான மற்றும் சிறப்பாக திட்டமிடப்பட்ட குற்றவாளிகளின் வலையமைப்பாக இருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பலரை கண்டறிந்து கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
200-க்கும் மேற்பட்ட பொலிஸார் இணைந்து, 15 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக 330 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
சந்தேக நபர்களிடமிருந்து 32 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.