ஒன்றாரியோவில் 28 நாட்களுக்கு கடும் ஊரடங்கு உத்தரவு!
கனடாவின் Ontario மாகாணத்தில் வரும் சனிக்கிழமை முதல் அடுத்த 28 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்படவுள்ளது. சுமார் 14 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட Ontario-வில் கடந்த வாரம் புதிதாக 2000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மார்ச் மாத தொடக்கத்தில் பதிவானதைவிட இருமடங்கு அதிகம் ஆகும். அத்துடன் புதன்கிழமையன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 421-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் அத்தியாவசிய கடைகள் 50 சதவீத பணியாட்களுடன் திறந்திருக்க அனுமதிக்கப்படும். ஏப்ரல் 12 முதல் வாரம் வரை பள்ளிகள் திறந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் மற்ற கடைகள், ஜிம், சலூன், உணவகங்கள் போன்றவை மூடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் புதன்கிழமை நிலவரப்படி 982,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை கிட்டத்தட்ட 23,000 பேர் உயிரிழந்துள்ளனர்.