கனடாவில் கோரத் தீ விபத்து ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணம், லோயர் சாக்வில் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பயங்கர தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேனர் டிரைவ் (Manor Drive) பகுதியில் உள்ள வீடொன்றில் அதிகாலை 4 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், வீட்டினுள் நுழைய முயன்ற போதிலும், கடுமையான புகை மற்றும் தீயின் தாக்கம் காரணமாக அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஹாலிஃபாக்ஸ் பிராந்திய தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வீட்டினுள் இருந்த மூவரை மீட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ உதவியாளர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பலியானவர்கள் 38 மற்றும் 73 வயதுடைய இரு பெண்கள் மற்றும் 43 வயதுடைய ஒரு ஆடவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவப் பரிசோதனைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே வீட்டில் மூவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.