ஒகஸ்ட் முதல் கனேடிய பொருட்களுக்கு 35% வரி; டொனால்ட் ட்ரம்ப்
ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா மீதான அண்மைய வரிகளை ட்ரம்ப் வியாழக்கிழமை (10) சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
புதிய வரிகள்
அதில், கனடாவுக்கான புதிய வரிகள் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கனடா பதிலடி கொடுத்தால் அது அதிகரிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார்.
அமெரிக்கா ஏற்கனவே சில கனேடிய பொருட்களுக்கு 25% முழுமையான வரியை விதித்துள்ளது. இந்த நிலையில் 35% வரி என்பது வொஷிங்டனுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கு ஒரு அடியாகும்.
அதேவேளை இந்த வாரம் ஜப்பான், தென் கொரியா மற்றும் இலங்கை உள்ளிட்ட அமெரிக்க வர்த்தக பங்காளிகளுக்கு ட்ரம்ப் அனுப்பிய 20க்கும் மேற்பட்ட கடிதங்களில் இந்தக் கடிதமும் ஒன்றாகும்.
கனடாவின் கடிதத்தைப் போலவே, ஒகஸ்ட் 1 ஆம் திகதிக்குள் வர்த்தக பங்காளிகள் மீது அந்த வரிகளை அமுல்படுத்துவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
அதேசமயம் அண்மைய வரி அச்சுறுத்தல் கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ ஒப்பந்தத்தின் (CUSMA) கீழ் வரும் பொருட்களுக்குப் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ட்ரம்ப் அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகளுக்கு உலகளாவிய 50% வரியையும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத அனைத்து கார்கள் மற்றும் லொரிகளுக்கும் 25% வரியையும் விதித்துள்ளார்.
செப்பு இறக்குமதிகளுக்கு 50% வரியையும் அண்மையில் அவர் அறிவித்தார், இது அடுத்த மாதம் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கனடா அதன் பொருட்களில் நான்கில் மூன்று பங்கினை அமெரிக்காவிற்கு விற்கிறது.
மெக்ஸிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும், அமெரிக்க ஏற்றுமதிகளை அதிகம் வாங்குபவராகவும் கனடா உள்ளமை குறிப்பிடத்தக்கது.