கனடாவில் மிக நீண்ட காலமாக குடிதண்ணீர் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை... தற்போது கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி
கனடாவுக்குச் சொந்தமான ஒரு தீவில் 24 ஆண்டுகளாக சுத்தமான குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், Shoal Lake 40 First Nation என்றொரு சிறு தீவு கனடாவில் உள்ளது. அங்கு செல்ல சரியான போக்குவரத்து வசதி கிடையாது. கோடைக்காலத்தில் படகுப் பயணம், குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்துவிடுவதால் அந்த உறைந்த தண்ணீர் மீது ஆபத்தான வகையில் பயணம். இப்படி அடிப்படை வசதியே இல்லாத ஒரு இடத்தில், வீட்டில் குழாயைத் திறந்தால் சுத்தமான குடிதண்ணீர் வரும் என எதிர்பார்க்கமுடியுமா?
ஆகவே, சுமார் 24 ஆண்டுகளுக்கு முன், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவும், அல்லது போத்தல்களில் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே அருந்தவும் அத்தீவின் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்திருக்கிறது.
சுத்தமான குடிதண்ணீர் இல்லாமல் பலர் நோய்வாய்ப்பட்ட நிலையில், அடிப்படை வசதி கூட இல்லாத அந்த தீவில் வாழ்ந்த மக்களுக்கு, மற்றவர்களை விட நாம் கீழானவர்கள் போலும் என்று எண்ணம் கூட வந்திருக்கிறது.
ட்ரூடோவின் ஆட்சிக்காலத்தில் அந்த தீவில் முதன்முறையாக ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று அந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் துவங்கியதையடுத்து, முதன்முறையாக 24 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் குழாய்களில் வரும் சுத்தமான தண்ணீரை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.
பெடரல் பூர்வக்குடியின சேவைகள் துறை அமைச்சரான Marc Millerம், தீவின் தலைவரான Chief Vernon Redskyயும் முதன்முறையாக குழாயில் வந்த குடிதண்ணீரை சுவைத்து, அது நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆக, கனேடிய வரலாற்றில் மிக நீண்ட காலமாக விடுக்கப்பட்டிருந்த தண்ணீர் தொடர்பான எச்சரிக்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, மக்கள் குழாய்களில் வரும் சுத்தமான குடிதண்ணீரை அருந்தியதில் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.