500 விமானங்கள் இரத்து; முடங்கியது இண்டிகோ விமான சேவை
இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், விமான நிறுவனம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் விளைவாக, ஆறு முக்கிய விமான நிலையங்களில் சரியான நேரத்தில் இயங்கும் செயல்திறன் 8.5% ஆகக் குறைந்துள்ளது.

இயல்பு நிலைக்குத் திரும்ப பிப்ரவரி ஆகலாம்
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதித்துள்ளது.
விமானப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ( DGCA ) விதித்த புதிய விமானப் பணிக் கால வரம்பு (FDTL) விதிமுறைகளை முறையாக அமல்படுத்தத் தவறியமையே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை விமான நிலையச் செயல்பாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பி, நிலையான கால அட்டவணைக்குத் திரும்ப, அடுத்த வருடம் பிப்ரவரி 10 ஆம் திகதி வரை ஆகலாம் என்று இண்டிகோ, அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளது.