உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 6 வயது இந்திய சிறுவன்
இந்தியாவை சேர்ந்த 6 வயது சிறுவன், உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளான்.
பெங்களூருவின் ஆர்.டி நகரை சேர்ந்த தம்பதி ஸ்ரீவிஜய்- வசந்தி, இவர்களது 6 வயதுத மகன் தருண்.
சிறுவயது குழந்தையாக இருந்த போதே, தருணுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்தார் வசந்தி.
14 மாத குழந்தையாக இருந்தபோது மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு ‘‘ஆசிய ஸ்மார்ட் குழந்தை’’ என்ற விருது கிடைத்தது. அவருக்கு அதிக நினைவாற்றல் கொண்ட குழந்தை என்ற விருதும் கிடைத்தது.
சுயமாக கற்றலில் திறன் படைத்த தருண், அதற்காக இந்திய புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் பிடித்தார்.
சர்வதேச அளவில் நடைபெற்ற விண்வெளி தொடர்பான போட்டியில் பங்கேற்ற தருணுக்கு 59-வது இடம் கிடைத்துள்ளது.
இப்படி 5 வயதுக்கு உள்ளாகவே அந்த சிறுவன் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்த வரிசையில் இளம் சாதனையாளர் தருண் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கிராபிக் டிசைனர், விண்வெளி கோள்கள் குறித்த படங்களை வரைதல், ஆன்லைனில் விளையாட்டுகளை சுயமாக உருவாக்குதல் மற்றும் அனைத்து வகை திறனையும் வெளிப்படுத்தியதற்காக இந்த இடம் தருணுக்கு கிடைத்துள்ளது.
தருண் தற்போது எம்.எஸ். பெயிண்ட், 3டி அனிமேசன் மற்றும் பல்வேறு மென்பொருள்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளார்.
விண்வெளித்துறையில் தருணுக்கு உள்ள ஆர்வத்தை கண்ட இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன், அந்த சிறுவனை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.