கனடாவில் காணாமல் போன 7 வயது சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு
கனடா தினமன்று ஹாமில்டன் பகுதியில் உள்ள இயற்கை பாதுகாப்பு வலயத்திற்குச் சென்றபோது காணாமல் போன ஏழு வயது சிறுவன், துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
நெத்தானியேல் செலம்பி என அடையாளம் காணப்பட்ட இந்தச் சிறுவன், கடந்த புதன்கிழமை (ஜூலை 1) பிற்பகல் 3 மணியளவில் 'பின்புரூக் பாதுகாப்பு வலயத்தில்' இருந்தபோது திடீரென காணாமல் போயிருந்தான். சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார், அவசரகால மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பெருமளவிலான தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
இந்நிலையில், பீல் பிராந்திய பொலிஸாரின் நீருக்கடியிலான தேடுதல் மற்றும் மீட்புக் குழுவின் முக்குளிப்பாளர்கள், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் சிறுவனின் உடலை ஏரிப் பகுதியில் இருந்து மீட்டனர்.

இந்த மரணம் குறித்து ஹாமில்டன் பொலிஸ் பிரிவு மற்றும் மரண பரிசோதகர் அலுவலகம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும், இந்த மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கிடமான பின்னணியோ அல்லது குற்றச் செயல்களோ இருப்பதாகத் தெரியவில்லை என பொலிஸார் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
"நெத்தானியேலின் குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் மற்றும் இந்தத் துயரமான இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருடனும் எங்களது எண்ணங்கள் எப்போதும் இருக்கும். தேடுதல் வேட்டையின் போது உதவிய பொதுமக்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என ஹாமில்டன் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சோகச் சம்பவம் குறித்து ஹாமில்டன் நகர மேயர் ஆண்ட்ரியா ஹார்வத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "7 வயது சிறுவன் நெத்தானியேல் செலம்பி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட செய்தி அறிந்து எனது இதயம் நொறுங்கிவிட்டது.
சிறுவனின் குடும்பத்தினருக்கும், அவனது வகுப்புத் தோழர்களுக்கும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.