திருமண ஆசையால் 1.3 கோடி ரூபாயை இழந்த 73 வயது முதியவர்!
இந்ந்தியாவின் மகாராஷ்டிராவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண் ஒருவர் 73 வயது முதியவரிடம், ரூ.1.3 கோடி அளவிற்கு மோசடி செய்த சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மலாட் பகுதியை அடுத்த மார்வாணியை சேர்ந்தவர் ஜெரோன் ஜான் டிஷோசா. இவர் ஷாலினி சிங் என்ற இளம்பெண், தனது முதுமையை காரணம் காட்டி, இந்த வயதில் தன்னை திருமணம் செய்துகொண்டு தனக்கு பக்கபலமாக இருப்பதாக சொல்லி, ரூ.1.3 கோடி அளவிற்கு மோசடி செய்துவிட்டதாக அந்தேரி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
பொலிசார் எவ்வளவு முயன்றும், குறித்த பெண்ணின் மறைவிடம் குறித்த தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகின்றது. தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக டிஷோசா அளித்த புகாரில், 2010-ஆம் ஆண்டில், சாண்டா குருஜ் பகுதியில் தனது தந்தைக்கு சொந்தமான இடத்தை விற்ற வகையில் தனக்கு ரூ. 2 கோடி அளவிற்கு பணம் கிடைத்தது. இந்த பணத்தை, நான்கு பாகங்களாக பிரித்து 4 வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டுகளாக போட்டு வைத்திருந்தேன்.
இந்நிலையில், தனியார் வங்கியில் பணியாற்றுவதாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஷாலினி சிங், தன்னிடம் நெருங்கி பழக ஆரம்பித்தார். அத்துடன் தங்கள் வங்கியில் அதிக வட்டி வாங்கித்தருவதாக தெரிவித்து, அங்கும் ஒரு பிக்சட் டெபாசிட் போட வைத்தார்.
அதன்பின்னர் நெருங்கிப்பழகிய அவர், தன்னை திருமணம் செய்துகொண்டு காலம் முழுவதும் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார். அத்துடன் பிசினஸ் செய்தால், அதிக லாபம் கிடைக்கும். அந்த லாபத்தை நாம் பங்குபோட்டுக்கொள்வோம் என்று தெரிவித்து என்னிடம் இருந்து ரூ.1.30 கோடி அளவிலான பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என டிஷோசா தனது புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.