மியன்மாரில் இதுவரை 745 பேர் படுகொலை
கடந்த பெப்ரவரி மாதம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 745 ஆக உயர்வடைந்துள்ளதுதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 23 ஆம் திகதிய நிலவரப்படி, இந்த இராணுவ ஆட்சிக்குழுவினால் 745 பேர் கொல்லப்பட்டதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர், இராணுவத்தால் இதுவரை கிட்டத்தட்ட 3,371 பேர் கைது செய்யப்பட்டடுள்ளார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆசியான் உச்சிமாநாட்டில் மியான்மரின் இராணுவத் தலைவர் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங் (Min Aung Hlaing) கலந்து கொள்ள உள்ளார்.
மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்த்தது. அத்துடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi), ஜனாதிபதி வின் மைன்ட் (Vin Mind) உட்பட 100 க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களையும் அந்நாட்டு இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
இதனையடுத்து இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றபோதும் , கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் அதனை ஒடுக்கி வருகிறது.