பிரேசிலில் வெப்ப காற்றுப் பலூன் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
பிரேசிலின் தென் மாநிலமான சாண்டா கட்டாரினாவில், வெப்ப காற்றுப் பலூன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்துக்குப் பிறகு அது வானிலிருந்து கீழே விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்த காணொளிகளில், பலூன் தீப்பற்றி எரிகின்றபோது அதிலிருந்து கரும் புகைமூட்டம் வெளிப்படுவதையும், பின்னர் தரையிறங்கும் போதே தீவிபத்தில் சிதறிப் போவதையும் காணலாம்.
சாண்டா கட்டாரினா ராணுவ தீயணைப்பு பிரிவின் தகவலின்படி, அந்த பலூனில் மொத்தமாக 21 பேர் இருந்ததுடன், ஒருவர் பைலட் ஆவார்.
13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது போன்றதொரு சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சாவ் பவுலோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
அப்போது பலூன் ஒன்று விழுந்ததில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்தனர்.
பிரேசிலின் தெற்குப் பகுதிகளில், குறிப்பாக பரயா கிராண்டே (Praia Grande) போன்ற இடங்களில், ஜூன் மாதத்தில் புனித ஜான் உள்ளிட்ட கத்தோலிக்க புனிதர்களை நினைவுகூரும் விழாக்களின் போது வெப்ப காற்றுப் பலூன் பயணங்கள் பரவலாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.