எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற 08 பேர் மாயம் ; இறுதியாக வந்த குறுஞ்செய்தி
இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேஷியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா நீரிணை பகுதியில் உள்ள 'அனக் கிரகடாவ்' என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு வெடித்து சிதறியது.
இந்நிலையில், வெடிப்புச் சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 05 புகைப்பட ஊடகவியலாளர்கள், 02 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உட்பட 08 பேர் நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த திங்கட்கிழமை மாலை எரிமலைப் பகுதியை அடைந்துவிட்டதாக அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பின்னர் இதுவரை அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போனவர்கள் முன்னணி செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் நடுக் கடலில் மாயமான ஊடகவியலாளர்களைத் தேடும் பணியில் இந்தோனேஷிய கடலோரப் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.