8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன ; ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை நிறுத்தியதாக ட்ரம்ப் பேசியதன் எண்ணிக்கை ஏற்கனவே 50ஐ கடந்தது.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள்
நேற்று, மியாமியில் நடந்த அமெரிக்க வணிக மன்றத்தில் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், "கடந்த எட்டு மாதங்களில், கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா இடையேயான போர்கள் உட்பட எட்டு நீண்டகால போர்களை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். நான் சில செய்தித்தாள்களின் முதல் பக்கங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அணு ஆயுதம் ஏந்திய நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குப் போவதை நான் அறிந்தேன்.
அந்த நேரத்தில், ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. எட்டாவது விமானமும் மோசமாக சேதமடைந்தது. அடிப்படையில் எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பின்னர் நீங்கள் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யாவிட்டால், நான் உங்களுடன் வியாபாரம் செய்ய மாட்டேன் என்று மிரட்டினேன்" என்று தெரிவித்தார்.
அச்சுறுத்தலுக்கு பிறகு, மறுநாள் இரு நாடுகளும் சமாதானம் செய்து கொண்டதாக தனக்கு அழைப்பு வந்தது என்றும் வரிகள் இல்லாமல், அது ஒருபோதும் நடந்திருக்காது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இருப்பினும் எந்த நாட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை. டிரம்ப் கூற்றை இந்தியா ஏற்கனவே மறுத்துள்ளது குறிப்பிடத்க்கது.