காரிலிருந்து தூக்கியெறியப்பட்ட குழந்தை: கனேடிய மாகாணம் ஒன்றில் பயங்கர விபத்து...
கனேடிய மாகாணமொன்றில், ட்ரக்குடன் மோதுவதைத் தவிர்க்க முயன்ற கார் பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டது.
கனடாவின் ஆல்பர்ட்டாவில் கடந்த சனிக்கிழமை மாலை நிகழ்ந்த விபத்தொன்றில், கார் ஒன்றில் பயணித்த ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
ஆல்பர்ட்டாவிலுள்ள நெடுஞ்சாலை இரண்டில் ட்ரக் ஒன்று கார் ஒன்றை முந்தியுள்ளது.
காரை முந்திய ட்ரக்கின் சாரதி, வேண்டுமென்றே காரின் முன் சென்று பயங்கரமாக பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
ட்ரக் மீது மோதுவதை கார் சாரதி தவிர்க்க முயல, கார் சாலையின் நடுவிலிருந்த மீடியனில் மோதி சாலையில் உருண்டுள்ளது. அப்போது காரிலிருந்த ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தை ஒன்று தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்துள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் காரில் பயணித்த பெரியவர்கள் இருவர், சிறுவர்கள் இருவர் என மேலும் நான்கு பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய ட்ரக் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. பொலிசார் அந்த ட்ரக்கை தேடி வரும் நிலையில், யாராவது இந்த சம்பவத்தைக் கண்ணால் கண்டிருந்தாலோ, அல்லது தங்கள் டேஷ்கேம் கமெராவில் இந்த விபத்து பதிவாகியிருந்தாலோ தங்களை தொடர்புகொள்ளுமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.