தண்ணீரில் சிக்கி தத்தளித்த குழந்தை... யோசிக்காமல் தண்ணீரில் குதித்த ஆட்டிஸ சிறுவன்... ஒரு நெகிழவைக்கும் சம்பவம்
கனடாவில், தண்ணீரில் தத்தளித்த குழந்தையை ஆட்டிஸக் குறைபாடு கொண்ட சிறுவன் ஒருவன் காப்பாற்றிய நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆல்பர்ட்டாவைப் பொருத்தவரை, இந்த கோடையில் மட்டும் 15 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருகிறார்கள்.
அந்த எண்ணிக்கையை அதிகரிக்க விடாமல் தடுத்திருக்கிறான் ஒரு சிறுவன். தனது நான்கு குழந்தைகளுடன் ஆல்பர்ட்டாவிலுள்ள Whitecourt என்ற இடத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் ரிலாக்ஸ் செய்துகொண்டிருந்திருக்கிறார் Melanie Drake.
அப்போது அவரது ஐந்து வயது மகன் Bo தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான். சற்று நேரத்தில் அவன் ஆழத்துக்குச் சென்றதை அவனது தாய் கவனிக்கவில்லை. ஆனால், ஒரு ஆட்டிஸக் குறைபாடு கொண்ட சிறுவன், அவனுக்கு சத்தம் பிடிக்காது. ஆகவே, சற்று தொலைவில் ரப்பர் மிதவை உதவியுடன் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்திருக்கிறான்.
அவனது பெயர் Austin (11). அந்த சிறுவன் தண்ணீரில் மூழ்குவதையும், அசைவற்றுக் கிடப்பதையும் கண்ட ஆஸ்டின், உடனே தண்ணீரில் குதித்திருக்கிறான்.
நான் உடனே செயல்படவில்லை என்றால், அந்த குழந்தை இறந்துவிடக்கூடும் என தான் நினைத்ததாக பெரிய ஆள் போல பேசுகிறான் ஆஸ்டின்! சட்டென குழந்தையைத் தூக்கிக்கொண்டு தன் தாயிடம் ஓடிய ஆஸ்டின், அவரிடம் நடந்ததைக் கூறியிருக்கிறான்.
சற்று முன்தான் ஒரு பெண் அவசர உதவியை அழைத்ததைக் கவனித்திருந்த ஆஸ்டினுடைய தாயாகிய Lysa Loiseau, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அந்த பெண்ணிடம் ஓடியிருக்கிறார். அது குறித்துக் கூறும் Melanie, அப்போதுதான் குழந்தையைக் காணவில்லை என அவசர உதவியை அழைத்தேன்.
கண் மூடித் திறப்பதற்குள் ஒரு பெண் என் மகன் Boவைத் தூக்கிக்கொண்டு என்னைத் தேடி வருகிறார் என்கிறார். அப்போது தன் மகன் Boவை ஆஸ்டின் காப்பாற்றிய விடயம் Melanieக்குத் தெரியாது.
பிறகு, பேஸ்புக்கில் தன் மகனைக் காப்பாற்றிய சிறுவனுக்கு அவர் நன்றி கூற, அதற்குப் பிறகுதான் அவருக்கு நடந்த விடயம் எல்லாம் தெரியவந்துள்ளது. இரு குடும்பங்களும் சந்தித்துக்கொள்ள, கண்ணீருடன் ஆஸ்டினைக் கட்டியணைத்துக்கொண்ட Melanie, அவன் என்னுடைய ஏஞ்சல், அவன் என் மகனுடைய ஏஞ்சல், அவனை சந்தித்தது எங்கள் பாக்கியம் என நெகிழ்கிறார்.