அவுஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு நேர்ந்த பெரும் சோகம்!
அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ரட்ணசிங்கம் பரமேஸ்வரன் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
48வயதான அவர் இன்று காலை தூக்கத்திலேயே மரணமடைந்ததாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அவர்,மேன்முறையீட்டு வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தியநிலையிலேயே அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தார்.
வேலை செய்வதற்கான உரிமையும் அவருக்கு மறுக்கப்பட்டிருந்ததாக அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். இதேவேளை ரட்ணசிங்கம் பரமேஸ்வரனின் 25 வயது மகனும் மனைவியும் இலங்கையில் வசிக்கின்றனர்.
நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் கூட்டுவிளைவாக அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் மரணமடைந்தனர் என்றும் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.