கனடாவில் அமையவுள்ள தமிழர் நினைவு சின்னம்(Photos)
கனடா பிரம்டன் மாநகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நினைவு சின்னம் அமைய இருக்கின்றது.
ஈழத்தில் சிங்கள பேரினவாதிகளால் 2009ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட பாரிய இனப்படுகொலையின்போது இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்திருந்தனர்.
நினைவு சின்னம்
உயிரிழந்த தமிழ் உறவுகளின் நினைவையும் தியாகத்தையும் போற்றி பேணும் நோக்குடனும் பல்லின சமூகத்துக்கும் இனப்படுகொலை தொடர்பான செய்திகளை தெரியப்படுத்தும் இலக்குடனும் ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும் என கருதியுள்ளனர்.
இதற்கமைய பல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். அந்த வேளை பிரம்டன் மாநகரம் நினைவு சின்னத்திற்கான இடத்தை நகரின் மையத்தில் தர முன்வந்துள்ளது.
அவ்விடத்தில் அமையக்கூடிய சின்னத்தை வடிவமைத்த தமிழ் சமூகத்தினர் கடந்த மாதம் அதை வெளியீடு செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, யூலை 1, 2, 3 ஆம் நாட்களில் வட அமெரிக்க தமிழ் சங்கம் நடத்திய கலை, பண்பாட்டு மாநாட்டில் கண்காட்சியாக இந்த வடிவமைப்பை காண்பித்திருந்தனர்.
அத்தோடு, இந்த சின்னம் வெளிப்படுத்தும் கருத்துகளை ஒரு காணொளியாகவும் ஒளிபரப்பினர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டதுடன், பல்வேறு தகவல்களையும் அறிந்து சென்றுள்ளனர்.
இந்த நினைவு சின்னம் அமைவதற்கான நிதி உதவிகளையும் தருவதற்கும் பலரும் முன் வந்துள்ளனர்.
மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த பல்வேறு பிரமுகர்களும் இந்த இனப்படுகொலை நினைவு சின்னம் பற்றி கேட்டறிந்துள்ளனர்.
இந்த கண்காட்சி வழியே தமிழின படுகொலை பற்றிய செய்திகளை பலரும் அறிந்துகொள்ள வாய்ப்பேற்பட்டிருந்தது.
தமிழர்களின் தேசிய பூவான கார்த்திகை பூவின் அமைப்பை அடியொற்றியும் ஐந்து கட்டங்களாக வகுக்கப்பட்ட தமிழர் வரலாற்றை உள்ளடக்கியும் இந்த சின்னம் வடிவமைக்கப்பட உள்ளது.
விரைவில் இந்த நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பமாகும் எனவும் ஏற்பாட்டளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி
உலகளாவிய தமிழ் மக்களின் பங்களிப்புடன் கட்டியெழுப்பப்படும் இந்த தமிழ் இன அழிப்பு நினைவு தூபிக்கு பங்காளராவதற்கு உங்களனைவரின் நிதியுதவியினை தாராள மனதுடன் அளியுங்கள் என தெரிவித்துள்ளனர்.