கொலை வழக்கில் கைதான ஒன்ராறியோ மருத்துவருக்கு ஜாமீன்
ஒன்ராறியோவின் ஹாக்ஸ்பரி நகரில் வயதான நோயாளியின் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஹாக்ஸ்பரி மற்றும் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த Pointe-Claire பகுதியை சேர்ந்த 89 வயதான Albert Poidinger என்பவர் மரணமடைந்த விவகாரத்தில், 35 வயதான மருத்துவர் Brian Nadler கைது செய்யப்பட்டார்.
இவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, விசாரணை கைதியாக உள்ளார். இந்த நிலையில் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மருத்துவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அவரது ஜாமீன் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, அவர் கனடாவில் தங்கி இருக்க வேண்டும் என்பதுடன், அவரது உத்தரவாதத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவரியில் இருக்க வேண்டும்.
பிணையில் வெளிவந்த பின்னர் அவர் மருத்துவராக பணி செய்யவோ அல்லது ஹாக்ஸ்பரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எந்த ஊழியர்கள், நோயாளிகள் அல்லது உறவினர்களை தொடர்பு கொள்ளவோ கூடாது.
இதனிடையே, ஹாக்ஸ்பரி மற்றும் மாவட்ட பொது மருத்துவமனையில் வயதான நோயாளிகளின் சந்தேக மரணங்கள் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Dollard-des-Ormeaux பகுதியில் வசித்து வந்த மருத்துவர் Brian Nadler மீது கடந்த மார்ச் 26ம் திகதி கொலை வழக்கு பதியப்பட்டது.
இதனையடுத்து அவர் ஒன்ராறியோ மருத்துவ அமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.