கனடாவில் வாழும் ஆப்கன் நாட்டவர் அரசுக்கு விடுத்துள்ள கண்ணீர் கோரிக்கை
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் ஆப்கன் நாட்டவர் ஒருவர், ஆப்கானிஸ்தானிலிருக்கும் தன் மனைவி மற்றும் பிள்ளைகளை மீட்குமாறு கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது பெயரை வெளியிட்டால், அவரது குடும்பத்துக்கு ஆபத்து வரலாம் என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
தாலிபான்கள் ஆட்சியின் கீழ் வாழமுடியாது, அது பைத்தியக்காரத்தனமானது என்று கூறும் அவர், அவர்கள் எல்லோரையும் கொன்று குவித்து வருகிறார்கள், குறிப்பாக பெண்களை என்கிறார்.
அவர்கள் கதவைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேற ஒரு வழி கிடைக்கும் வரை அவர்களுக்கு வேறு வழியில்லை என்கிறார் அவர்.
வான்கூவரில் வாழும் அந்த நபருடைய மனைவியும், ஆறு மற்றும் மூன்று வயதுடைய மகள்களும் காபூலில் இருக்கிறார்களாம். வெளியே துப்பாக்கி சுடும் சத்தமும், ராக்கெட் வீசும் சத்தமும் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளதாக அவர்கள் தங்கள் தந்தையிடம் கூறினார்களாம்.
ஆகவே, எப்போதும் அவர்களைக் குறித்த அச்சத்துடன் இருக்கும் தன்னால் தூங்கக்கூட இயலவில்லை என்கிறார் அவர்.
ஆகவே எப்படியாவது தன் குடும்பத்தை மீட்டுத்தருமாறு கனடா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் அவர்.