ஆப்கானில் இருபாலர் கூட்டுக் கல்விக்கு தலிபான்கள் தடையா...
ஆப்கானிஸ்தானில் இரு பாலின கூட்டுக் கல்விக்கு தலிபான்கள் தடை வித்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைபற்றியுள்ள தலிபான்கள் ஷரியத் சட்டத்தின்படி ஆட்சி என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த நாட்டில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இருபாலர் கூட்டுக் கல்வி முறைக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்கலைக்கழக பிரதிநிதிகள், அரசு மற்றும் தனியார் கல்விக்கூடங்களின் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவை தலிபான்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆட்சியை கைப்பற்றியதும் அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள முதல் ஃபத்வா (Fatwa) இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண் பிள்ளைகளுக்கு பெண்கள் மட்டுமே பாடம் வழங்க வேண்டுமெனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் 40000 மாணவர்கள் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.