ஆயுதங்களுடன் வீதிக்கிறங்கிய ஆப்கானிஸ்தான் பெண்கள்!
தலிபான்களிடமிருந்து தப்பிக்க ஆயுதங்களுடன் ஆப்கானிஸ்தான் பெண்கள் வீதிக்கிறங்கிய புகைப்படாங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் அரச படைகளுக்கு இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளும் போரில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்பியதை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா- தலிபான்கள் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க படைகள் வெளியேறியது. எனினும் ஆப்கன் தலிபான் மற்றும் ஆப்கன் இராணுவத்திற்கு இடையிலான மோதல்கள் நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நடந்து வருகின்றன.
குறிப்பாக, கிராமப் புறப் பகுதிகளை தலிபான் கைப்பற்றிவருகிறது. தலிபன்கள் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கூறிக்கொள்வதால், பெண்கள், ஒரு காலத்தில், தலிபன் ஆதிக்கத்தில் ஆப்கான் இருந்ததையும் அப்போது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறியதையும் அச்சத்துடன் மக்கள் நினைவு கூறுகின்றனர்.
இந்த நிலையில் , ஆப்கான் பெண்கள் ஆயுதமேந்தி நிற்கும் படங்கள் சில வெளியாயின. அவர்களில் பெரும்பாலோர் துப்பாக்கிகளையும் ஆப்கானிஸ்தானின் கொடியையும் சுமந்து நிற்பதுடன் ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் பெண்கள் தெருக்களில் துப்பாக்கிகளுடன் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் தலிபான்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்புவதுடன் துப்பாக்கியுடன் தாங்கள் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
தலிபன்களுடன் அரசாங்கத்தால் தனியாகப் போராட முடியாது, எனவே தாங்களும் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் ஆதரவாக நிற்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதேவேளை , ஆப்கானிஸ்தானில் பெண்களின் இந்த முன்னெடுப்பு, காபூல், ஃபார்யாப், ஹெராத் மற்றும் பிற நகரங்களிலும் கூட தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


