பாய்ந்து வந்த ரயில்... தூக்கி வீசப்பட்ட கார்: கனடாவில் கோர சம்பவம்
ரொறன்ரோவில் ரயிலுடன் கார் மோதிய கோர விபத்தில் இரண்டு பெண்கள் மரணமடைந்ததுடன் மூவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
சிம்கோ கவுண்டியின் New Tecumseth பகுதியிலேயே குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணி கடந்த நிலையில் அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து சடலமாக பெண் ஒருவரை மீட்டுள்ளனர். மேலும், நால்வரை ஆபத்தான நிலையில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், இன்னொரு பெண் காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார்.
எஞ்சிய மூவர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். ஒரே வாகனத்தில் பயணித்த இவர்கள் ஐவரின் வயதும் 19 முதல் 28 என கூறப்படுகிறது. மரணமடைந்த இரு பெண்களும் 19 முதல் 24 வயதிருக்கலாம் எனவும், உறவினர்கள் வந்து அடையாளம் காணும் வரையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படாது என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். ரயில் தண்டவாளத்தில் அந்த இளைஞர்களின் கார் சிக்கிக்கொண்டது தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் முதற் கட்டத்தில் இருப்பதால் இதுவரை வழக்கேதும் பதியப்படவில்லை என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பில் நேரில் பார்த்தவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.