பறவைக் காய்ச்சல் எதிரொலி ; பல்லாயிரக்கணக்கான சீல் குட்டிகள் உயிரிழப்பு
உலகளவில் பரவி வரும் H5N1 பறவைக் காய்ச்சல் காரணமாக, அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான தொலைதூர அண்டார்டிக் தீவுகளில் (Heard Island) பல்லாயிரக்கணக்கான தென் கடல் யானை (Southern elephant seal) குட்டிகள் உயிரிழந்துள்ளதாகப் புதிய ஆய்வொன்றில் அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத் தரவுகளின்படி, ஹேர்ட் தீவிலிருந்த 17,364 சீல் குட்டிகளில் 13,359 குட்டிகள், கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் பறவைக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளன.

சில குறிப்பிட்ட பகுதிகளில் 97 வீதமான குட்டிகள் உயிரிழந்துள்ளதுடன், கிங் (King) மற்றும் ஜென்டூ (Gentoo) பெங்குவின் தொகையிலும் வழக்கத்திற்கு மாறான இறப்புகள் பதிவாகியுள்ளன.
அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்பில் இதுவரை H5N1 தொற்று பதிவாகாத பின்னணியில், அதன் வெளிவாரிப் பிராந்தியத் தீவொன்றில் இத்தொற்று கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
1,800 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரான்சுக்குச் சொந்தமான குரோசெட் தீவுகளில் இருந்து இடம்பெயர்ந்த பறவைகள் மூலமாகவே இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த நிலைமை கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய சுற்றாடல் அமைச்சர் முர்ரே வாட், அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்பிற்கும் இந்தத் தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருந்து திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.