சீனாவை அடக்க முக்கிய மூன்று நாடுகள் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்!
சீனாவை எதிர்கொள்ளும் புதிய முயற்சியாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதன்கிழமை ஒரு புதிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.
இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் அதிகரித்து வரும் சக்தி மற்றும் இராணுவ இருப்பு குறித்து மேற்கண்ட மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன. இந்த நிலையில் சீனாவை எதிர்கொள்ளும் புதிய முயற்சியாக இந்த ஒப்பந்தம் வெளிவந்துள்ளது.
அதன்படி ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison)ஆகியோரால் அறிவிக்கப்பட்ட கூட்டாண்மை கீழ், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அணுவாயுதத்தால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துவதற்கான தொழில்நுட்பத்தையும் திறனையும் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கும்.
ஆக்கஸ் (Aukus) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் ஆகியவற்றையும் உள்ளடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோ பிடன் (Joe Biden), போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் ஸ்காட் மோரிசன் (Scott Morrison)ஆகியோர் ஆக்கஸ் என்று பெயரிடப்பட்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடங்குவது குறித்து ஒரு கூட்டு அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டனர்.
அதில் அவர்கள், "இந்த ஒப்பந்தம் இந்தோ-பசிபிக்கி பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் எங்கள் பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும்" என்றும் கூறினர்.
இதேவேளை இந்த புதிய ஒப்பந்தத்தின் விளைவாக பிரான்ஸ் வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா இரத்து செய்தது.
மேலும் 2016 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் 50 பில்லியன் அமெரிக்க டொலர் (€ 31bn; £ 27bn) பெறுமதியான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.