London புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து ;அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று(12) பிற்பகல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது. இந்நிலையில் விமானம் புறப்பட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
242 பேர் பயணித்ததாக தகவல்
இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளது.
இதனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விமான விபத்து நடந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆமதாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
ஆமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பயணித்தவர்களின் நிலை குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.