அல்பர்ட்டாவில் காட்டுத்தீப் புகை மூட்டம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அல்பர்ட்டா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அளவிலான காற்றுத் தர எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்குப் பகுதிகள் மற்றும் வடக்கு அல்பர்ட்டா ஆகிய பகுதிகளில் பரவி வரும் கடும் காட்டுத்தீ காரணமாக உருவான அடர்ந்த புகை மூட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அடர்ந்த புகையினால் கல்கரி மக்களுக்குச் சுவாசப் பிரச்சினைகள் மற்றும் சுகாதார ஆபத்துகள் ஏற்படுவதுடன், பார்வைத்திறனும் வெகுவாகக் குறையக்கூடும் என 'கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை' எச்சரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, கல்கரியின் காற்றுத் தரக் குறியீடு 6 ஆகப் பதிவாகியுள்ளது.
இது மிதமான ஆபத்து நிலவரத்தைக் குறிக்கிறது. செவ்வாய்க்கிழமை கல்கரியில் 25°C வரை வெப்பநிலை உயரும் எனக் கணிக்கப்பட்டிருந்தாலும், புகை மூட்டம் அதிகமாக இருந்தால் சூரியக் கதிர்கள் புவியின் மேற்பரப்பை அடைவது தடுக்கப்பட்டு வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது.
மேற்பரப்புக் காற்று தென்கிழக்கிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி மணிக்கு 15 - 25 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
எனினும், மேல் அடுக்குக் காற்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கல்கரியை நோக்கி வீசுவதால், காட்டுத்தீ தீவிரமாக இருக்கும் பகுதிகளிலிருந்து மேலும் புகை நகர்ந்து வரக்கூடும். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.