தலைவலி, மூச்சுத் திணறலால் அவதிக்குள்ளாகும் ஆல்பர்ட்டா மக்கள்
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் Saskatchewan பிராந்தியங்களில் பற்றியெரியும் காட்டுத்தீயால் உருவான கரும்புகையால் தற்போது ஆல்பர்ட்டா மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
காட்டுத்தீயால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கரியில் காற்றின் தரம் பத்துக்கு 7 என்ற அளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது ஆபத்தான அளவு எனவும் நிபுணர்கள் தரப்பில் குறிப்பிடுகின்றனர். இதனால், குறிப்பாக சிறு குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் உடல்நலக் கவலைகள் அல்லது சுவாச பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
காற்றின் தரம் குறைந்துள்ளதால், சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி மருத்துவர்களை காண வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும், அல்லது மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறும் நிலை வரலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரும்புகை காரணமாக தொழில் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தில் இருப்பதால், தொண்டை அரிப்பு, தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்பு கொண்டவர்கள் கண்டிப்பாக வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.