800 கி.மீ துரத்திலிருந்து வான் வழி தாக்குதல் ; ஜெலென்ஸ்கி வெளியிட்ட தகவல்
உக்ரைன் படைகள் ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ. உள்நாட்டில் அமைந்துள்ள தொலைதூர இலக்கைக் குறிவைத்து வான் வழி தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யாவில் அமைந்துள்ள ‘சிஸ்ரான்’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நேற்று (20) நள்ளிரவில் நடத்தியது.

இது குறித்து, ரஷ்யாவின் சமாரா பிராந்திய ஆளுநர் யாசேஸ்லாவ் ஃபெடோரிச்சேவ் கூறுகையில், சிஸ்ரான் பகுதியில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருவர் பலியானதாக தெரிவித்தார்.
ஆனால், உக்ரைனின் கூற்றுப்படி எண்ணெய் ஆலையில் தாக்குதல் நடந்ததா என்பதைப் பற்றி அவர் உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில், முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ‘ராஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிஸ்ரான் சுத்திகரிப்பு ஆலையில் உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் உக்ரைன் - ரஷ்யா இடையேயான தொடர் சண்டையில், ரஷ்யாவில் தொலை தூர இலக்குகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை விரிவாக்கம் செய்துள்ளது.
இதற்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை உக்ரைன் பயன்படுத்தி வருகிறது.
சுமார் 4 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரில் ஆரம்பகால கட்டத்தில் நேட்டோ நாடுகளின் ராணுவ உதவியை பெருமளவில் சார்ந்திருந்த உக்ரைனிடமிருந்து இப்போது பிற நாடுகள் இராணுவ தொழில்நுட்ப உதவியை நாடும் நிலைக்கு உக்ரைன் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.