அஸ்ட்ராசெனகாவுடன் தொடர்பு... முதல் மரணத்தை பதிவு செய்த இன்னொரு கனேடிய மாகாணம்
அஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக்கொண்ட எட்மண்டன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக உறவினர்களும் நண்பர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவ அதிகாரிகளால் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டிருந்தும், 50 வயது கடந்த ஆல்பர்ட்டா பெண்மணி என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் மரணமடைந்தவர் 52 வயதான Lisa Stonehouse என்பதும், அவர் எட்மண்டன் பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 21ம் திகதி லிசா தனது முதல் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர், விரைவிலேயே அவருக்கு அதன் பக்கவிளைவுகள் தென்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
லிசாவின் மரணம் கனடாவில் மூன்றாவது எனவும் ஆல்பர்ட்டா மாகாணத்தில் முதலாவதாக எனவும் தெரிய வந்துள்ளது. ஏப்ரல் பிற்பகுதியில் கியூபெக்கில் 54 வயதான ஒரு பெண்ணும், நியூ பிரன்சுவிக்கில் 60 வயதில் ஒரு பெண்ணும் இதற்கு முன்னர் தடுப்பூசி தொடர்பான சிக்கலால் மரணமடைந்துள்ளனர்.
ஆல்பர்ட்டா மாகாணத்தை பொருத்தமட்டில், இதுவரை அஸ்ட்ராசெனெகா அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் மொத்தம் 253,000 டோஸ்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.