மதுவுக்கும் கஞ்சாவுக்கும் கனேடியர்கள் செலவிட்ட தொகை: மலைக்கவைக்கும் கணக்கு
கொரோனா தொற்று பரவத்தொடங்கிய நாள் முதல் கனேடிய மக்கள் மதுவுக்கும் கஞ்சாவுக்கும் செலவிட்ட தொகை 2.6 பில்லியன் டொலர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய ஆய்வினை ஹாமில்டனின் McMaster பல்கலைக்கழகம் உட்பட மூன்று மையங்கள் இணைந்து முன்னெடுத்துள்ளன.
இதில் வெளியாகியுள்ள தரவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 2020 முதல் ஜூன் 2021 வரையான காலகட்டத்தில் மது மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பில் குறித்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் திட்டமிடப்பட்ட விற்பனையை விட 5.5 சதவிகிதம் அதிக மது விற்பனை நடந்துள்ளதாகவும், இது தொற்றுநோய்க்கு முந்தைய கணிக்கப்பட்டதை விட 1.86 பில்லியன் அதிகமாக விற்பனையாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
கஞ்சா விற்பனை எதிர்பார்த்ததை விட 25 சதவீதம் அதிகமாக இருந்தது எனவும், இதன் மதிப்பு கூடுதலாக 811 மில்லியன் டொலர்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தற்போது தொற்றுநோயில் இருந்து நாம் வெளியே வந்துள்ளோம், இனி கஞ்சா பயன்பாடு தொடர்பில் அதிகரித்துள்ள பிரச்சனையை எதிர்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என McMaster பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளது.
கிடைத்துள்ள தரவுகளை சுட்டிக்காட்டி நாம் அதிர்ச்சியடைவதற்கு பதில், அந்த சூழலை நாம் எதிர்கொள்ள வேண்டும் என McMaster பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை நாம் எச்சரிக்கையுடன் அணுகி, அதனால் மக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்டறிய முடியும் என McMaster பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த மார்ச் 2020ல் மட்டும் மது மற்றும் கஞ்சா விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்ததன் காரணம், மக்கள் வாங்கி சேமித்ததே என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.