வெளிநாடொன்றில் அனைத்து பாடசாலைகளும் முடக்கம்! கொரோனா காரணம் இல்லை
நேபாளத்தில் காற்று மாசுபாடு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே இமையமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி, குப்பையை தீ வைத்து எரித்தல், வாகனப்புகை, கட்டுமானத்துறை பணியின் போது ஏற்படும் மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனாவில் நிலவிவரும் காற்று மாசுபாடும் நேபாளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில்.
காற்று மாசுபாடு காரணமாக பள்ளி செல்லும் மாணவமாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு பல்வேறு விதமான சுவாசப்பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. மேலும், பலருக்கும் கண் எரிச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் மாணவமாணவிகளின் உடல்நலை கருத்தில் கொண்டு நேபாளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) வரை மூடப்படுவதாக அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக நேபாளத்தில் பள்ளிகள் மூடப்படுவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நேபாள அரசுக்கு தற்போதைய காற்று மாசுபாடு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.