அமெரிக்காவில் சரமாரியான துப்பாக்கிச்சூடு! 3 பேருக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுள்ளது.
நேற்று முன்தினம் (08-05-2022) இரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.
குடியிருப்பு வளாகத்தில் இருந்த அனைவரும் அலறியடித்தப்படி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த மர்ம நபர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் 6 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கொலையாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதன்பின்னர் பொலிஸார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 6 பேரையும் மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் வைத்திய்சாலை செல்லும் வழியிலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன என்பது தெரியவராத நிலையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.