அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்: அவதிக்குள்ளான மக்கள்
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது.
இந்நிலையில், வீடுகள், மரங்கள், வாகனங்கள் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன. மேலும் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் பனித்துகள்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
மேலும், கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, கடலோரப் பகுதிகளில் நாள் முடிவில் ஒரு அடி அளவில் மாசசூசெட்ஸின் சில பகுதிகளில் மூன்று அடிவரை பனிப் பொழிந்து வருகிறது.
கடுமையான பனிப்புயல் காரணமாக 1,17,00-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். நியூயார்க் மற்றும் அண்டை மாகாணமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மாகாண மக்களைக் கேட்டுக் கொண்டார். மேலும் கிழக்குக் கடற் கரையில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பனிப்படர்ந்த இடங்களில் இயந்திரங்கள் மூலம் பனி அகற்றப்பட்டு வருகின்றனர்.