விபத்தில் சிக்கிய அமெரிக்க போர் விமானம் ; 7 வீரர்களுக்கு நேர்ந்த கதி!
தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் அப்பகுதியில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் குறித்த பகுதிகளில் அமெரிக்காவின் போர் விமானங்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் யூஎஸ்எஸ் கர்ல் வென்சன் போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த போர் கப்பலில் இருந்து போர் விமானங்கள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, பயிற்சிக்கு பின்னர் எஃப் 35சி ரக போர் விமானம் ஒன்று போர் கப்பலில் தரையிறங்க முயற்சித்தபோது, போர் கப்பலில் உள்ள விமான ஓடுதளத்தில் போர் விமானம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் போர் கப்பலில் இருந்த 7 வீரர்கள் காயமடைந்தனர். போர் விமானத்தின் விமானி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். விபத்து ஏற்பட்டபோது விமானி, விமானத்தில் இருந்து வெளியேறி கடலில் குதித்த நிலையில் , பிற அமெரிக்க வீரர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த வீரர்கள் 7 பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருகின்றது.