ஈரான் தாக்குதல் மேலும் ஒரு இலங்கை இளைஞனுக்கு காயம்
இஸ்ரேலின் பினீ பிராக்கில் (Bnei Brak) பணிபுரியும் இலங்கை இளைஞர் ஒருவர் இன்று (16) அதிகாலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் காயமடைந்துள்ளார்.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதர் நிமல் பண்டார, காலில் காயம் அடைந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இலங்கைத் தூதரகம் விடுத்த அறிவிப்பு
காயம் அடைந்த இளைஞனர் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் கட்டுமானத் துறையில் பணிபுரிபவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதேநேரம், ஈரான் நடத்திய இரவு நேரத் தாக்குதல்களில் இஸ்ரேலின் பாட் யாமில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளானார்.
இந்த சம்பவம் அதிகாலை 4:00 மணியளவில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, டெல் அவிவ் நகரின் தெற்கே ஒரு வீட்டில் பணிபுரிந்து வந்த மற்றொரு இலங்கைப் பெண் தாக்குதலினால் அவரது குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே, இலங்கைத் தூதரகம், அதிகாரிகள் 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறியது.
மேலும் பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்தில் உள்ள எந்தவொரு இலங்கை நாட்டவரும் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.