அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ; மீண்டுமொரு இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் காரில் அமர்ந்திருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது.
நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த சத்நாம் சிங் (31), கடந்த 25-ம் திகதி தான் வசித்துவரும் வீட்டுக்கு அருகே உள்ள செளத் ஓஸோன் என்ற பார்க் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அமர்ந்திருந்தார்.
மாலை 3.45 மணி அளவில் அங்கு வந்த ஒரு நபர் சத்நாம் சிங்கைக் சரமாறியாக துப்பாக்கியால் சுட்டார். கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் படுகாயமடைந்த நிலையில் அவரை, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அருகில் இருந்த ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தக் காணொலியை ஆய்வு செய்து வரும் நியூயார்க் பொலிசார், குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தில் சத்நாம் சிங் தான் வசித்த இடத்தைச் சேர்ந்தவர்களிடம் நட்பார்ந்த முறையில் பழகியவர் என அவருக்கு அறிமுகமானவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதேவேளை மேரிலாண்டின் பால்டிமோர் பகுதியில் வசித்துவந்த சாய் சரண் எனும் தெலுங்கானா மாநில இளைஞர் ஜூன் 19-ல் இதேபோல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சாய் சரணை சுட்டுக்கொன்றது யார் எனும் தகவல் இதுவரை வெளியாகவில்லை. அந்தச் சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் மற்றொரு இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது இந்தியா வம்சாளி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.