வாரம் 300 டொலர்... கனேடிய தொழிலாளர்களுக்கு வாய்ப்பு மீண்டும் நீட்டிப்பு
கனேடிய தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால ஊக்கத்தொகைக்கான மனுக்கள் பெறும் திகதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களை தகுதி பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் கனேடிய அரசாங்கத்தால் தொழிலாளர்களுக்கான ஊரடங்கு கால ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு, மனு அளிக்க வேண்டிய நாள் டிசம்பர் 22ம் திகதி வரையில் நீட்டிக்கப்பட்டது.
இதில் தகுதியான தொழிலாளர்கள் 2022 மே மாதம் 7ம் திகதி வரையில் ஒவ்வொரு வாரமும் 300 டொலர் ஊக்கத்தொகையாக பெறுவார்கள். தற்போது இந்த திட்டத்தில் மேலதிக மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் தகுதி பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் மனு அளிக்க வேண்டிய இறுதி நாள் 2022 பிப்ரவரி 12ம் திகதி என குறிப்பிட்டுள்ளனர். வரிகள் போக வாரம் 270 டொலர் ஊக்கத்தொகையை பெற தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தில் 50 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட இழப்பை எதிர்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கத்தின் இந்த நிபந்தனையால் எந்த மாகாணத்திலும் அல்லது பிரதேசத்திலும் தொழிலாளர்களால் விண்ணப்பிக்க முடியாமல் போனது. தற்போது நிபந்தனைகளை தளர்த்தியுள்ள அரசாங்கம் பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பெர்ட்டா, ஒன்ராறியோ, கியூபெக், நோவா ஸ்கோடியா உட்பட பல பகுதிகளை இணைத்துள்ளது.