அரகன் கிளர்ச்சி அமைப்பு பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கம்
மியன்மாரின் இராணுவ அரசாங்கம், கிளர்ச்சி அமைப்பான ‘அரகன்’ (Arakan Army) இராணுவத்தை பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. நாடு முழுவதும் அமைதியை நிலைநாட்ட உதவும் வகையில் இந்தக் குழு தாக்குதல்களை நிறுத்தியுள்ளதன் காரணமான இவ்வாறு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மியன்மர் அரசு நடத்தும் மிரர் டெய்லி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தக் குழுவை பயங்கரவாதக் குழுவின் பட்டியலில் இருந்து 2021, மார்ச் 11ஆம் திகதி முதல் நீக்கப்படுவதாக மிரர் டெய்லி தெரிவித்துள்ளது. அரகன் இராணுவம் மேற்கு ராகைன் மாநிலத்தில் சுயாட்சி கோரிப் போராடி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மியன்மார் இராணுவத்துக்கு பெரும் சவால் விடுத்து வந்தது. அத்துடன், சுமார் 70 ஆண்டுகளாகப் பல்வேறு இனப் போர்களையும் நடத்தி வருகிறது. இதேவேளை, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி மியன்மாரில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக தொடர் போராட்டங்களை அந்நாட்டு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனநாயக முறையில் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மற்றும் சிவில் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களை இராணுவம் தடுத்துவைத்துள்ளதால் மக்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவம் போராடி வருகின்றது. இந்த சூழலில், அரகன் இராணுவத்தை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து அகற்றுவதன் மூலம், நாட்டில் இராணுவம் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் தொடர் போராட்டங்களைத் தடுப்பதற்கும் ஏதுவாக அமையும் என கருதப்படுகிது.
மேலும் , அரகன் இராணுவத்தின் எதிர்ப்புக்களை ஒருபக்கம் வைத்துவிட்டு, இராணுவ ஆட்சி மீதான கவனத்தை முழுமையாகக் கையாள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.