கனடாவில் தயார் நிலையில் இராணுவம்... காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவ தயாராக இருப்பதாக பிரதமர் அறிவிப்பு
கனடாவில் பல்வேறு பகுதிகளை காட்டுத்தீ கபளீகரம் செய்துவரும் நிலையில், மக்களை வெளியேற்றவும், தீயை கட்டுப்படுத்தவும் உதவுவதற்காக இராணுவம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் வரலாறு காணாத அளவு வெப்பம் காரணமாக 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தலைநகர் Ottawa, போர் விமானங்கள் முதலான உதவிகளை அனுப்ப தயாராகி வருகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில், குறைந்தது 143 இடங்களில் தீப்பற்றி எரிவதாகவும், அவற்றில் 77 கடந்த இரண்டு நாட்களில் பற்றிய தீ என்றும், அவற்றில் பல மின்னல் காரணமாக உருவான தீ என்றும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் உதவுவதற்காக குழு ஒன்றை அமைத்து வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தாங்கள் மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த குழுவில் இராணுவ ஹெலிகொப்டர்கள், விமானங்களும் அடங்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 1,000 பேர் காட்டுத்தீ காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில், காணாமல் போன பலரை இன்னமும் அதிகாரிகள் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.