ராணுவ விமானம் தரையிறங்கும்போது விபத்து: 4 பேருக்கு நேர்ந்த சோகம்!
கசகஸ்தானில் ராணுவ விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கசகஸ்தானில் இன்று ராணுவ விமானம் ஒன்று தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கசகஸ்தானின் தேசிய பாதுகாப்புப் படைக்கு சொந்தமான அந்த விமானம், அந்நாட்டின் தலைநகர் நூர்-சுல்தானில் இருந்து அல்மாதி நகரில் உள்ள விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமானிகள் உள்பட மொத்தம் 6 பேர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் அல்மாதி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன், விமானம் தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துடன் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.