இராணுவ கல்லூரியில் சக வீரர்களை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர்!
தாய்லாந்து இராணுவ கல்லூரியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் இராணுவ கல்லூரி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கல்லூரி வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
அப்போது கல்லூரியில் பணியில் இருந்த 59 வயதான இராணுவ வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார்.
இராணுவ வீரர் சுட்டதில் 3 வீரர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளனர்.
இதையடுத்து அந்த இராணுவ வீரர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 வீரர்களையும் சக வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொரு வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு தப்பியோடிய அந்த இராணுவ வீரர் சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்கு பிறகு தாமாக முன்வந்து பொலிஸில் சரணடைந்துள்ளார்.
பொலிஸார் அவரை கைது செய்து துப்பாக்கிச்சூட்டின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.