டொரண்டோவில் மோசமான செயல்களில் ஈடுபட்ட பெண்கள்
டொரண்டோ பெரும்பாக பகுதியில் முதியவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் கவனத்திருப்பல் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண்களின் புகைப்படங்களை டோரண்டோ பொலிஸார் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளனர்.
இக்கும்பலால் பாதிக்கப்பட்ட மேலும் பல நபர்கள் இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிப்பதால், அவர்களை அடையாளம் காணும் நோக்கில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து டோரண்டோ பொலிஸ் அதிகாரி ரான் டவெர்னர் செய்தியாளர்களிடம் விவரிக்கையில், இந்த கொள்ளைக் கும்பல்கள் பயன்படுத்தும் வன்முறை மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
இவர்களின் பிரதான இலக்காக 80 மற்றும் 90 வயதுடைய முதியவர்களே இருந்துள்ளனர். கொள்ளையர்களின் இந்தத் திடீர் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் நகைகளைப் பறிக்கும் கொடூரமான செயல்களினால், சில வயோதிபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டப்ளின் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட 'புராஜெக்ட் ஜெட்செட்டர்' என்ற விசேட புலனாய்வு விசாரணையின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
பெரும் டோரண்டோ பகுதியில் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இயங்கி வரும் சர்வதேசக் குற்றக் கும்பல்களின் வலைப்பின்னலை இந்த விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் கோடைகாலக் கொண்டாட்டங்கள் மற்றும் டோரண்டோவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை போட்டிகளை முன்னிட்டு, பொது இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் பொலிஸார் கோரியுள்ளனர்.
பொது இடங்களில் உங்களிடம் "அளவுக்கு மீறிய பாசம் மற்றும் நட்பு" காட்டி பழக வரும் அந்நிய நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கொள்ளையர்கள் பொதுவாக ஜோடிகளாகவோ அல்லது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பக் குழந்தைகளைப் பயன்படுத்தியோ திருட முற்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பணப்பைகள், பேக்பேக்குகளின் ஜிப்களை எப்போதும் மூடி வைத்திருப்பதோடு, மொபைல் போன்களை முன்பக்கப் பாக்கெட்டுகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு சூழல் உங்களுக்கு அசௌகரியத்தையோ அல்லது சந்தேகத்தையோ ஏற்படுத்தினால், உடனடியாக உங்களது உள்ளுணர்வை நம்பி அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள் எனப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.