டொராண்டோ விமான நிலைய தங்கக் கொள்ளை ; ஒருவருக்கு தண்டனை
கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கக் கொள்ளையாகக் கருதப்படும், பியர்சன் (Pearson) சர்வதேச விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய அர்சலான் சவுத்ரி என்ற 43 வயது நபருக்கு பிராம்ப்டன் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
2023, ஏப்ரல் 17 அன்று சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து வந்த விமானத்தில் இருந்த 400 கிலோ தங்கம் மற்றும் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் திருடப்பட்டது.
இதன் மொத்த மதிப்பு சுமார் 22.5 மில்லியன் டாலர்கள் ஆகும். துபாயிலிருந்து டொராண்டோ திரும்பிய சவுத்ரியை கடந்த ஜனவரி மாதம் பீல் (Peel) பிராந்திய போலீசார் கைது செய்தனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற விசாரணையில், ஒன்ராறியோ நீதிமன்ற நீதிபதி ஷானன் மெக்பெர்சன் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அர்சலான் சவுத்ரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அவர் ஏற்கனவே சிறையில் கழித்த நாட்களைக் கழித்து மீதமுள்ள காலம் கணக்கிடப்படும். திருடப்பட்ட 22 மில்லியன் டாலர் தொகைக்காக, அவருக்கு 40 ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட இழப்பீடு வழங்கும் உத்தரவு (Restitution Order) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருட்டு, குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை வைத்திருத்தல் மற்றும் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிடுவதில் சவுத்ரி மிக முக்கியப் பங்காற்றியுள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை கனடாவிற்கு வெளியே கொண்டு செல்வதற்கும், விற்பனை செய்வதற்கும் அவர் வழிவகுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வழக்கில் தொடர்புடைய பிற நபர்கள் இவரை இந்தக் கொள்ளையின் "டாப் டாக்" (Top Dog) அல்லது மூளையாகச் செயல்பட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.