ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை; சந்தேக நபர்கள் நால்வர் சுட்டுக் கொலை
ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் (Joanel Moyes) அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் ஜனாதிபதி படுகொலை தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தலைமை அதிகாரி லியோன் சார்லஸ் (Leon Charles)தெரிவித்துள்ளார். அத்துடன், ஆயுததாரிகளின் பிடியில் பிணைக் கைதிகளாக இருந்த 3 பொலிஸாரை மீட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.
ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் (Joanel Moyes) நேற்று புதன்கிழமை அதிகாலை அவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் துப்பாக்கிச் சூட்டில் அவரது மனைவியும் காயமடைந்தார்.
ஏற்கனவே வன்முறைகளால் மோசமான நிலையில் உள்ள கரீபியன் நாடான ஹெய்ட்டியில் இந்தச் சடம்பவம் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டிப்பதாக ஹெய்ட்டி இடைக்காலப் பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்ததுடன் தற்போது நாடு முழுமையாக பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.
53 வயதான ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் 2016 நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 2017 பெப்ரவரி ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்தார். அவர் சர்வாதிகார ஆட்சியை நிறுவ முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வந்த நிலையில் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவரது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அரசியல் ரீதியில் பிளவடைந்துள்ள ஹெய்ட்டியில் வறுமை மற்றும் அரசியல் ஸ்திரமற்றத்தன்மை காரணமாக வன்முறைகள் அதிகரித்துள்ளன. அத்துடன், நாட்டில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து வருவதுடன், உணவுத் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ்(Joanel Moyes) படுகொலை செய்யப்பட்டுள்ளமை நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.