சாட் நாட்டின் ஜனாதிபதி போர்க்களத்தில் கொல்லப்பட்டார்
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மத்திய ஆபிரிக்க நாடான சாட்டின், ஜனாதிபதி இட்ரிஸ் டெபி இட்னோ, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் செவ்வாயன்று போர்க்களத்தில் கொல்லப்பட்டார்.
நாட்டின் உயர்மட்ட இராணுவத் தளபதி தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலியில் அறிவித்தார். ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் நாட்டில் 30 ஆண்டு காலமாக ஜனாதிபதி பதவி வகித்து வந்தவர், இத்ரிஸ் டெபி இட்னோ (68). கடந்த 11ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்த சில மணி நேரத்தில், இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த 6 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக தொடர வேண்டியவர், போர்க்களத்தில் கொல்லப்பட்டிருப்பது அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு அடுத்த 18 மாதங்களுக்கு அவரது மகன் மகாமத் இத்ரிஸ் டெபி இட்னோ (38) தலைமையிலான இடைக்கால அரசு நாட்டை நிர்வகிக்கும் என்று இராணுவம் அறிவித்துள்ளது.
மேலும் அங்கு இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இராணுவ அதிகாரியாக இருந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர் இத்ரிஸ் டெபி இட்னோ என்பது குறிப்பிடத்தக்கது.
1990 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் முன்னாள் பிரெஞ்சு காலனியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார். திங்கள்கிழமை பிற்பகுதியில் கிட்டத்தட்ட 80 சதவீத வாக்குகளுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.