வெவ்வேறு 2 தடுப்பூசிகளை போட்டால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்கள்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், 2 வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு நான்கு மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
கொரோனாவை விரட்டியடிக்க உலக நாடுகள் பலவும் தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளன, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் 2 வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் என்ன நடக்கும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதாவது, அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளை 2 தவணைகளாக அடுத்தடுத்து போட்டால் எப்படி இருக்கும் என்பதை அறிய அஜர்பைஜான் நாட்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆய்வில் 100 தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர், முதலில், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியும், 29 நாட்கள் கழித்து, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
இதில், முதலில் பங்கேற்ற 20 தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து ஆய்வு முடிவுகள் சேகரிக்கப்பட்டன.
ஆய்வின் 57-வது நாளில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேருக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது.
இதுபோல், ஐக்கிய அரபு அமீரகம், ரஷியா ஆகிய நாடுகளிலும் மேற்கண்ட 2 தடுப்பூசிகளை பயன்படுத்தி ஆய்வு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.